பல்லடம், டிச.2: பல்லடத்தில் பயணி தவற விட்ட 10 பவுன் தங்க நகையுடன் கூடிய பையை அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் பத்திரமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.
கோவையைச் சேர்ந்தவர் முகமது இர்பான் (17). இவர் தனது சகோதரி சுவீனா, (25), பாட்டி சைனமா, (65) ஆகியோருடன், திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டி, அரசு பஸ்சில் பல்லடம் வந்தனர். அங்கிருந்து, திருப்பூர் பஸ்சில் ஏறும் போது, கையில் வைத்திருந்த 2 பைகளில் ஒன்றை பஸ் ஸ்டாண்டில் நின்ற பைக் மீது வைத்து விட்டு, மறந்தபடி பஸ்சில் ஏறி சென்றனர்.
பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் நேர காப்பாளராக பணியாற்றி வரும் பழனிசாமி என்பவர், பயணி தவற விட்ட பையை மீட்டு ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.திருப்பூர் சென்ற பின் பையை தவற விட்டதை அறிந்த இர்பான் மற்றும் குடும்பத்தினர், மீண்டும் பல்லடம் திரும்பினர். போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு தவற விட்ட பை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் திரும்ப பையை பெற்றுச் சென்றனர்.

