உடன்குடி,செப்.26: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2ம்நாள் விழாவில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். உலக அளவில் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 23ம்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அரசு இசைப்பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு 8மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடந்து வருகிறது. அந்தவகையில் 2ம் திருநாளையொட்டி 24ம்தேதி இரவு 10 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம் என்ற நிலையில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். இதனிடையே தசராதிருவிழாவையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வேடமணிய திருக்காப்பு அணிந்து வருகின்றனர்.
+
Advertisement