கோவில்பட்டி, செப். 15: கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 558 வழக்குகளுக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா ஆகியோர் முன்னிலையில் 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது.
மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 825 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.2 கோடியே 42லட்சத்து 27 ஆயிரத்து 318க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.