உடன்குடி,அக்.8: தூத்துக்குடி, முத்தையாபுரம், கக்கன்ஜி நகரை சேர்ந்த சுதாகரின் மகன் சிவா (20), இவரும், கோவில்பட்டி, லிங்கம்பட்டி புதுகாலனியை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் சத்திய செல்வன் (22), திருச்செந்தூர் அருகேயுள்ள நா. முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் சிவகுமார் (22) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்களுக்கும், குரும்பூர் அருகேயுள்ள குரங்கன்தட்டு பகுதியைச் சேர்ந்த கிஷோர், பரத், செந்தில், சிவகுமார் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் 4 பேரை தேடி சிவா, சத்தியசெல்வன், சிவகுமார் ஆகிய 3 பேரும் குரங்கன்தட்டுக்கு கடந்த 5ம்தேதி இரவு ஊருக்குள் வந்துள்னர்.
அத்துடன் அரிவாள், பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 பேரை வெட்ட ஊரை சுற்றி வந்துள்னர். மேலும் அப்போது வீட்டின் முன்பாக நின்றிருந்த முத்துராஜ் என்பவரை தாக்கினர். மேலும் வேதனை தாளாமல் அலறிய அவரது சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மனைவி சிவசங்கரியையும் வெட்ட முயன்றனர். இதையடுத்து அவர் ஊர்த்தலைவர் ஆத்தியப்பனிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அவரது வீட்டிற்கு சென்றனர். இதனிடேயே பாதிக்கப்பட்டோரின் அலறல் சத்தத்தால் ஊர்மக்கள் திரண்ட போது அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை 3 பேரும் கொடூரமாக தாக்கிகொண்டிருந்தனர். இதையடுத்து 3 வாலிபர்களை பிடிக்க முயன்றபோது தப்பியோடினர்.
இதனால் ஆத்திரமடைந்த குரங்கன்தட்டு கிராம மக்கள் நள்ளிரவில் நெல்லை- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் சமரசப்படுத்தியதோடு சம்பந்தப்பட்ட 3 வாலிபர்களையும் கைது செய்வதாக உறுதியளித்தார். அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்து ஊர்த் தலைவர் ஆத்தியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த குரும்பூர் போலீசார், ஊருக்குள் புகுந்து பெண்களை தாக்கிய சிவா, சத்திய செல்வன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனர். அத்துடன் மூவரிடம் இருந்து அரிவாள், பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.