வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பேருந்துகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பேனர் ஒட்டும் பணி
திருவாரூர்,நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் விளம்பர பேனர் ஒட்டும் பணியினை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மோகனசந்திரன் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் விளம்பர பேனர் ஒட்டும் பணியினை திருவாரூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மோகனசந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் வரும் 1.1.2026ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்ததினை தயார் செய்தல், பயிற்சி, அச்சிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி, வாக்குச்சாவடி மறுவரையறை, வகைப்படுத்துதல், கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்து வெளியிடுதல், கோரிக்கைகளையும் மற்றும் மறுப்புரைகளையும் பெறுதல், வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல் மற்றும் கோரிக்கைளும் மற்றும் மறுப்பரையாகவும் பெறப்பட்டவைகளை முடிவு செய்தல், இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் ஆரோக்கிய படிநிலைகளை சரிப்பார்த்து ஆணையத்தின் இறுதி ஒப்புதலை பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு அடுத்தாண்டு (2026) பிப்ரவரி மாதம் 7ந் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பணியினை மேற்கொள்ளும் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விட கூடாது என்றும், தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் என்பது 1.1.2002ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 1.4.2002 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 843 பெண் வாக்காளர்களும் என கூடுதல் 7 லட்சத்து 60 ஆயிரத்து 889 வாக்காளர்கள் இருந்தனர்.
இவ்விபரங்கள் தற்போதைய வாக்காளர் விபரங்களுடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் ஒப்பிடப்பட்டு இவ்விபரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 5 லட்சத்து 22 ஆயிரத்து 982 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 52 ஆயிரத்து 526 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 577 வாக்காளர்களும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஒப்பிட்டு பணியின்போது கடைசியாக 2002ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர்களாக இருந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 889 வாக்காளர்களில் தற்போதும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 355 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.
மேலும் இந்த கால அட்டவணைக்கிணங்க, மாவட்டம் முழுவதும் 4 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் இருந்து வரும் ஆயிரத்து 194 வாக்குசாவடி மையத்திற்குட்பட்ட வாக்காளர்களிடம் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான படிவங்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டு தற்போது மீண்டும் படிவங்கள் திரும்ப பெறும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த காலகெடு என்பது அடுத்த மாதம் 4ந் தேதி என்ற நிலையில் அதற்குள் படிவத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

