ஆரணி, டிச. 11: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மேல்சாவடி தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஹரி(23), தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 29.11.2020 அன்று ஹரி தனது நண்பர் புவனேஷ்ஷை அழைத்துக் கொண்டு போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றபோது, போளூர்-திருவண்ணாலை சாலை வசூர் கூட்ரோடு அருகே திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி வந்த அரசு பஸ் ஹரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக ஹரியின் தந்தை செல்வம்(51), ஆரணி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் விபத்தில் பலியான அவரது மகனுக்கு இழப்பீடு வழங்ககோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சாலை விபத்தில் பலியான ஹரியின் குடும்பத்திற்கு ரூ.23.74 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஹரியின் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை. இதனால், ஹரியின் தந்தை செல்வம் மீண்டும் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக முறையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட விரைவு நீதிபதி ஜெயஸ்ரீ இழப்பீடு வழங்காததால் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆரணி டவுன் வழியாக போளூருக்கு சென்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஆணை நிறைவேற்றுனர் தலைமையில் நேற்று வழக்கறிஞர் பாலமூர்த்தி மற்றும் கோர்ட் ஊழியர்கள் பஸ்சை ஜப்தி செய்து, ஆரணி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.


