செங்கம், செப்.15: செங்கம் அருகே கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(83). இவரது மனைவி காசியம்மாள்(75). இவர்களது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதி தங்களது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணன்- காசியம்மாள் தம்பதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தங்களை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் மனவேதனையில் இருந்து வந்தார்களாம்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, கிருஷ்ணன், அவரது மனைவி காசியம்மாள் ஆகிய இருவரும் பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து விட்டு சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.