Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு: வீடு கட்டாவிட்டால் பட்டா ரத்தா? அவகாசம் கேட்டு பயனாளிகள் மனு

திருத்தணி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாய மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இருப்பினும், பட்டா இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பயனாளிகள் பெரும்பாலானோர் இலவச வீட்டு மனைகளில் வீடுகள் கட்டி குடியேறாத நிலையில், அவை காலி மனைகளாகவே இருந்து வருகின்றன.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சரின் உத்தரவின்பேரில், தகுதியானவர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதை உறுதிப்படுத்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு விவரங்கள் சமர்பிக்க கேட்டிருந்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான கணக்கீடு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடு கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனரா, காலியாக உள்ளதா போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிராம நத்தம், பாறை புறம்போக்கு, ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருபவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா பெற்று இதுவரை வீடு கட்டாமல் காலியாக வைத்துள்ளவர்களின் பட்டா ரத்தாகும் என்று பயனாளிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையே, திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் உராட்சியில் 110 குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 2001ல் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் வீடுகள் கட்டி குடியேற கால அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தி பயனாளிகள் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.