Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அருகே மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்படும் தரைப்பால பணி தற்காலிக நிறுத்தம்: 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு  விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, செப்.25: பெரியபாளையம் அருகே, மங்களம் கிராமத்தில், மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணியினை விரைவில் முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே மங்களம், பெருமாள்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் உள்ளிட்டோர் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலை வழியாக ஆரணிக்குச் சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றனர். மேலும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருவார்கள்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், கடந்த பிப்ரவரி மாதம் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் மூலம் மங்களம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை, புதுப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும் உயர்மட்ட பாலம் போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த மங்களம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில், ஆரணியாற்றில் வெள்ளம் வந்தால் 10 கிராம மக்களாகிய நாங்கள் ஆபத்தான முறையில் செல்கிறோம். எனவே, இங்கு தரைப்பாலம் கட்ட வேண்டும் என பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதை கேட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தரைப்பாலம் கட்ட மதிப்பீடு செய்யும்படி உத்தரவிட்டார்.

பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலெக்டருக்கு மதிப்பீடு செய்து கொடுத்தனர். தொடர்ந்து, கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தரைப்பாலம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. அதன்படி, ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலத்திற்கான பணிகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அதிகளவு தண்ணீர் வந்ததால் தரைப்பாலப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆரணியாற்றை கடந்து ஆபத்தான முறையில் செல்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தரைப்பால பணிகளை முடிக்க வேண்டும் என என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த தரைப்பாலம் அமைப்பது குறித்து தினகரன் நாளிதழில் அடிக்கடி படத்துடன் செய்தி வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.