திருவள்ளூர், அக்.16: திருவள்ளூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில். நாளை (17ம்தேதி) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த, வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு, தனியார் துறையில் அசெம்ப்ளி லைன் ஆப்பரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.