வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற வாகனங்கள், இயந்திரங்கள் தயார்: மாநகராட்சி நடவடிக்கை
ேபாரூர், செப்.16: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வகை வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வடிகால் அமைப்பது, நீர்நிலைகளை தூர்வாரி பராமரிப்பது, பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பிரதான கால்வாயாக திகழும் ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் ஓடை, மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த கால்வாய்களின் நீர்வழிப்பாதைகள் 95 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மழைநீர் எளிதாக வெளியேறும். மாதவரம் பகுதியில் செங்குன்றம் அருகே சாலைகளில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்தது. இங்கு இரட்டை துளை ஏற்படுத்தப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 18 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க சுமார் 15 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்கிங்காம் கால்வாயில் சேரும் கீழ்கட்டளை வடிகால் 1 மற்றும் 2-ல் 60 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஒக்கியம் மடுவிலிருந்து நீரை விரைவாகவும், நேரடியாகவும் கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள பொக்லைன் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் சக்திமான் இயந்திரங்கள், பாப்காட், ரோபோடிக் எக்ஸ்கவேட்டர்கள், ஆம்பியன், மினி ஆம்பிபியன், சூப்பர் சக்கர் வாகனங்கள், கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்கள், மின்சாரத்தால் இயக்கப்படும் மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், டீசல் பம்புகள், நீர் மூழ்கி மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து தயார்படுத்தும் பணிகள் நேற்று சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் உரிய பொறுப்பு அலுவலர்களின் வாயிலாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்டது. மேலும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மோட்டார் பம்புகளுடன் கூடிய டிராக்டர்கள் ரிப்பன் மாளகதக வளாகத்திற்கு வரப்பெற்று தயார்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிக்காக, சென்னை மாநகராட்சியில் 50 எச்.பி. திறன் வரையிலான 594 மோட்டார் பம்புகள், 192 நீர்மூழ்கி பம்புகள், 500 டிராக்டர் பம்புகள், 100 எச்.பி. திறன் கொண்ட 150 டீசல் பம்புகள் பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும், 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், கையினால் இயக்கப்படும் 224 மரக்கிளை அகற்றும் இயந்திரங்கள், மரக்கிளை அகற்றும் 52 டெலஸ்கோபிக் இயந்திரங்கள், கிரேன் பொருத்தப்பட்ட 5 வாகனங்கள், 7 பொக்லைன் வாகனங்கள், 60 பாப்காட் வாகனங்கள், 93 டிப்பர் லாரிகள், 1 டெலிஹேண்ட்லர் வாகனம் என மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.