Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் இதுவரை 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பூந்தமல்லி அக்.14: சென்னை போரூர் காரம்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,551 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை என்பதுதான் மக்களின் அடிப்படைத் தேவை. இதில் முக்கியமானது இருக்க இடம். உங்களுடைய கஷ்டங்களை, பதற்றங்களை போக்கும் விதமாக இன்றைக்கு பட்டா வழங்க உள்ளோம். இன்று முதல் நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் வீடுகளில் உறங்கலாம்.

மதுரவாயல் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம், மதுரவாயல் மட்டுமல்ல, சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மட்டும் 1.40 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 19 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கான திட்டங்களால் இந்தியாவிலே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

நாளுக்கு நாள் மக்களிடையே திமுக அரசிற்கான ஆதரவு பெருகி வருகிறது. அரசை தேடி மக்கள் வர வேண்டாம், மக்களைத் தேடி அரசே வரும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். கலைஞர் வழியில் நம்முடைய முதல்வர் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வருகிறார். முற்போக்கான திட்டங்களை நாம் நிறைவேற்றியதால்தான் இன்றைக்கு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்று இந்தியாவிலே முதல் மாநிலமாக நாம் உள்ளோம். தமிழ்நாட்டு மக்களுக்கு பக்கபலமாக திமுக நிற்கும். இந்த அரசுக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துசாமி, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்எல்ஏக்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகர்ராஜா, எழிலன், ஜோசப் சாமுவேல், ஜே.ஜே எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அமுதா, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.