கடைகளை வாடகைக்கு விட்டு தனியாக வசித்து வரும் 80 வயது மூதாட்டியை தாக்கி ரூ.1 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை? புதுகும்மிடிப்பூண்டியில் பயங்கரம்
கும்மிடிப்பூண்டி, செப்.12: புது கும்மிடிப்பூண்டியில் 80 வயது மூதாட்டியை கட்டையால் தாக்கி ரூ.1 கோடி பணம், தங்கம் மற்றும் வைர நககளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஆஞ்சநேயர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (80). இவருக்குச் சொந்தமாக கன்னியம்மன் கோயில் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தைக் கொண்டு மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடைக்காரர்கள் சிலர் வாடகை பணத்தை கொடுப்பதற்காக நேற்று ராஜேஸ்வரியின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது, கதவு திறந்து கிடப்பதைக் கண்ட கடைக்காரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டில் உள்ள 2 பீரோக்களில் இருந்தும் மர்ம நபர்கள் பணம், தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை உருட்டுக்கட்டையால் மண்டையை உடைத்துவிட்டு தப்பி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ரொக்கப்பணம் மட்டும் ரூ.1 கோடி இருக்கும் என்றும், தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், டிஎஸ்பி தலைமையிலான 2 தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுத்து மூதாட்டியை கடுமையாக தாக்கிவிட்டு தங்க, வைர நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுக்கட்டாக ரூ.85 லட்சம் பணம்
மூதாட்டி வசித்து வந்த வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது பூஜை ரூமில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதில் ரூ.85 லட்சம் கைப்பற்றப்பட்டன. பணத்தை மூதாட்டியின் உறவினரிடம் ஒப்படைத்தனர். இதில் மூதாட்டி கண்விழித்தால் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளின் முழு விவரம் தெரியவரும். தொடர்ந்து போலீசார் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் 18 பேர் பதிவாகியுள்ள நிலையில், ஒரு வட மாநில இளைஞர் உள்பட சாலையில் சென்ற நபர்களை கண்டறிந்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.