பெரியபாளையம் அருகே கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களாக மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகும் அவலம்: டிராக்டர்களுக்கு கூடுதல் வாடகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை, அக்.8: பெரியபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரிகளை கண்டித்து, கொட்டும் மழையில் நனைந்தபடி விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் அருகே செம்பேடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு காதர்வேடு, வெங்கல், மேல்செம்பேடு, செம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒரு பருவத்திற்கு சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வார்கள்.
இந்நிலையில், செம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமார் 20 டிராக்டர்களில் நெல் மூட்டைகளை அடுக்கி நெல் கொள்முதல் நிலையத்திற்கு டிராக்டர்களில் எடுத்து வந்தனர். ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நெல் மூட்டைகளை எடுத்துச்செல்ல வண்டி வந்தால்தான் மூட்டைகளை வாங்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கோணி பைகள், சணல் கயிறுகள் இல்லை எனவும் கூறி, விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வாங்கவில்லை.
இதனால், நெல் மூட்டைகள் கடந்த 10 நாட்களாக டிராக்டர்களிலேயே கொள்முதல் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து, நாற்று வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் கொண்டு வந்த டிராக்டர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1000 வாடகை செலுத்த வேண்டி உள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி கொட்டும் மழையில் நனைந்தபடி விவசாயிகள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.