Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஆவடி, அக்.8: புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாக்கம் மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் பாலவேடு ஏ.என்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). ஆவடி தனியார் நிறுவனத்தில் ஜூனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருநின்றவூர் அடுத்த பாலவாக்கம் ஏஎன்எஸ் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக மின் இணைப்பு கேட்டு பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவர் முன்னதாக ரூ.5525 செலுத்தியுள்ளார். அதன்படி அவரது வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் ரஜினி (40) என்பவர் மின் இணைப்பு வழங்கியதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டு வீட்டின் உரிமையாளர் சங்கரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சங்கர், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் அடங்கிய குழுவினர், ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் கொடுத்து அதனை ரஜினியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, நேற்று மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் ரஜினியிடம் லஞ்ச பணத்தை சங்கர் கொடுத்தபோது, மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர். பின்னர், கைதான ரஜினியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.