திருத்தணி, அக்.7: திருத்தணி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் தண்டவளத்தை பயணிகள் கடந்து செல்வதை, ரயில்வே போலீசார் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி ரயில் மார்க்கத்தில் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை - திருத்தணி இடையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உட்பட நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இதில் காலை நேரங்களில் சென்னைக்குச் செல்லும் பயணிகள் மற்றும் பூக்கள் எடுத்துச்செல்லும் வியாபாரிகள் ரயிலில் அமர்ந்து பயணம் செய்யவும், எளிதாக ரயில் நிலையத்தை சென்றடையவும் தண்டவாளத்தை கூட்டமாக கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் தண்டவாளத்தை கடந்து ரயில் மேடைக்குச் சென்று ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement