போரூர், டிச.6: சென்னை விருகம்பாக்கம் சாய் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (27). பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பழகி வந்துள்ளார். அப்போது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழை காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த சுப்பிரமணி, இன்ஸ்டாகிராம் மெசெஞ்சர் மூலம் மாணவியை, தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, மாணவி தயக்கத்துடன் சுப்பிரமணி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் வித்யா என்பவர் கவனித்துள்ளார்.
சந்தேகமடைந்த வித்யா, 10 நிமிடம் கழித்து சுப்பிரமணி வீட்டின் கதவை தட்டி மாணவி இருக்கிறாரா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மாணவி இங்கு வரவில்லை என்று கூறியுள்ளார் உடனே வித்யா, மாணவியின் தாய்க்கு நடந்த சம்பவத்தை போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சுப்பிரமணி வீட்டிற்கு சென்ற பார்த்த போது, அவரது வீட்டின் பாத்ரூமில் மாணவி பாலியல் தொந்தரவுக்கு அளாக்கப்பட்ட நிலையில் மறைந்து இருந்தது தெரியவந்தது.
அதனை ெதாடர்ந்து, மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியை தவறான நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு போலீசார் கவுன்சலிங் அளித்தனர்.

