நீர்வரத்து அதிகமாக வருவதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
புழல், டிச.4: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியிலிருந்து 2500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, மாவட்ட கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3102 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 20.45 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2068 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் மீண்டும் 6வது முறையாக நேற்று முன்தினம் முதல் புழல் ஏரியிலிருந்து 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நீர் வரத்து அதிகரித்தாதல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி, புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் படிப்படியாக உயர்த்தப்பட்ட நிலையில் 2500 கன அடியாக திறக்கப்பட்டதால் உபரிநீர் கால்வாயில் ஆர்ப்பரித்து செல்கிறது.
புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. செங்குன்றம் அடுத்து வடகரை, பாபா நகர் கிராண்டலைன், சாமியார் மடம், தண்டல் கழனி, புழல் திருநீலகண்ட நகர், தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூர், சடையங்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால், உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது, மீன்களை பிடிப்பதோ போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார். கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

