பொன்னேரி, டிச.4: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகத்துவாரம் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக திருப்பாலைவனம் காவல் துறையினருக்கும், வருவாய்த்துறையினற்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த பொருளை மீட்டு ஆய்வு செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் அருகில் இருப்பதால் விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்திய பொருளா அல்லது வேறு ஏதேனும் கப்பல்களில் இருந்து ஒதுங்கிய பொருளா அல்லது கடல் நில அதிர்வுகளை கண்டறியும் கருவியா என திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். கடந்த 1ம் தேதி இதே போன்ற பொருள் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அந்தப் பொருள் கடல் நில அதிர்வினை கண்டறியும் கருவி எனவும், கப்பல்கள் மூலம் இழுத்து செல்லப்படும் போது அறுந்து கரை ஒதுங்கி இருக்கலாமா எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, கரை ஒதுங்கிய மர்ம பொருளை செங்கல்பட்டு மங்களாபுரத்தில் உள்ள வெடி பொருட்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement

