கம்பம், அக்.16: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் காலையில் மார்க்கெட்டுகளுக்கு செல்வோரும், சுமைகளின் மீது அமர்ந்தபடி பயணிக்கின்றனர். மேலும் திருமணம், காதணிவிழா, இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, ஆபத்தை உணராமல் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி, சரக்கு வாகனங்களில் பயணம் செய்வோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வாடகை குறைவு, அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் சரக்கு வாகனங்களில் கிராம மக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடைக்காது என்பதை அறியாமல் உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.