சின்னமனூர், செப். 16: சின்னமனூர் ராதாகிருஷ்ணன் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(42). கூலி தொழிலாளி. இவரது மனைவி தீபா(40). இவர்களது மகன் அருண். 10ம் வகுப்பு மாணவரான இவர் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தீபா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வம் நேற்று முன் தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு அறையில் தீபா சேலையால் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் சின்னமனூர் காவல் நிலைய எஸ்ஐ செல்வராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.