வருசநாடு, ஆக. 8: கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, மந்திசுனைமூலக்கடை, முத்தாலம்பாறை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு கிராமங்கள்தோறும் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து புதிய மேகமலை கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘‘இப்பகுதிகளில் ஏற்கனவே கொசுத்தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்து கொசுக்களின் இனப்பெருக்கத்தை தற்காலிகமாகக் குறைந்தது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக கொசு மருந்து அடித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். கொசுக்களை ஒழிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.