தஞ்சையில் இருந்து பொள்ளாச்சிக்கு 1000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு: ரயில் வேகன் மூலம் சென்றது
தஞ்சாவூர், நவ. 18: தஞ்சையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
தற்போது மாவட்டத்தில் குறுவை அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது . அறுவடை செய்யப்பட்ட நெல்கள் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் பொள்ளாச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


