ஒரத்தநாடு, அக். 10: தஞ்சாவூரை அடுத்துள்ள ராவுசாபட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த தங்கப்பா என்பவரின் மகன் மகேந்திரன் (25). இவர், நேற்று இரவு பைக்கில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லம்பட்டிக்கு நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேந்திரன் வல்லம் -ஒரத்தநாடு சாலையில் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே சென்ற பசு மாட்டின் மீது மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பசு மாடும் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தது.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.