Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திவ்ய திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதி விழா

கும்பகோணம், ஆக.3: கும்பகோணம் அருகே தாராசுரம் மந்திரபீடேஸ்வரி மகா திவ்ய திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி மாத அக்னி ஆணி தீமிதி திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னி ஆணி இறங்குதல் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரைத்தெருவில் பிரசித்தி பெற்ற மந்திரபீடேஸ்வரி மகா திவ்ய திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவின் போது அக்னியில் ஆணி தீமிதி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அதுபோல, இவ்வாண்டும் திருவிழா கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

விழாவின் 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு ஆணித்தகட்டினை சுவாமி சன்னதி தெருவில் ஸ்தாபித்து இருபுறம் அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து அரலாற்றங்கரையில் இருந்து சக்திகரகம், சக்திவேல், மகா வீரபத்திர சூலம், முனீஸ்வரர் மகாவேல், அம்மாள் திரிசூலம், வீரவாள்கள் மற்றும் திவ்ய திரௌபதி அம்பாள் திருவுருவ காட்சியுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் சன்னதிக்கு வந்து, அங்கு வளர்க்கப்பட்ட அக்னிக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ள 2 அடி அகலமும், 21 அடி நீளத்தில் பல ஆயிரம் எண்ணிக்கையிலான கூர்மையான இரும்பு ஆணிகள் கொண்ட இரும்பு ஆணித்தகட்டில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.