தஞ்சாவூர், அக்.23:ராஜராஜசோழன் சதய விழா கணக்கீட்டை திருத்தக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சோழமண்டல இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜாராஜசோழன் சதய விழா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா வருகிற 31 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது. இந்த சதய விழா 1040-வது சதய விழா என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதய விழா 1078வது சதய விழா என திருத்தி அறிவிக்க கோரி சோழமண்டல இளைஞர்கள் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சதய விழா கணக்கீட்டை திருத்தி அறிவிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர், அதில் கூறியிருப்பதாவது; மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா கணக்கீட்டில் வரலாற்று பிழை ஏற்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாகப் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தின் படி, மாமன்னர் ராஜராஜ சோழன் கி.பி.947 ல் பிறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட “ராசராசன் துணுக்குகள் நூறு” நூலிலும், அவர் 985-ம் ஆண்டு ஜுன் 25-ந்தேதி அன்று அரியணை ஏறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அரசு முடிசூட்டு ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 1040வது சதய விழா எனக் குறிப்பிடுவது தவறானது.
இது ராஜராஜ சோழனின் 1078-வது ஆண்டு சதய விழா ஆகும். வரலாற்று உண்மையையும் அரசின் நம்பகத்தன்மையையும் காக்க, சதய விழா கணக்கீட்டை திருத்தி, 1078-வது சதய விழா” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆவணங்களையும் தொல்லியல் துறை ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து அரசு அறிவிப்புகளையும் திருத்தி வெளியிட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.