Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீர் பாட்டிலால் தாக்கி பணம் பறிக்க முயற்சி டாஸ்மாக் சேல்ஸ்மேன், பெண் உட்பட 3 பேர் படுகாயம் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஜூலை 11: ஆரணி அடுத்த தேவிகாபுரம் கிராமம் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(48), இவர் ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முருகன் வழக்கம் போல் நேற்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரவு டாஸ்மாக் கடையில் மது விற்பனை கணக்குகளை முடித்துக் கொண்டு கடையை பூட்டினார். கடையில் விற்பனையான பணம் ரூ.2.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு, அதே கடையில் சூப்பர்வைசராக வேலை செய்யும் அவரது ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒரே பைக்கில் தேவிகாபுரத்திற்கு உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆரணி அடுத்த தச்சூர் ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றபோது, அருகில் இருந்த பேருந்து நிழற்கூடம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் பீர் பாட்டில், கல்லால் பைக்கில் சென்ற முருகனை தாக்கியுள்ளனர். முருகன் கையில் பணம் இருந்ததால் பைக்கை நிறுத்தாமல் ரத்த காயங்களுடன் பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் அவருடன் வந்த சூப்பர்வைசர் கார்த்திகேயன் காயம் அடைந்த முருகனை பைக்கில் அமர வைத்துக் கொண்டு, நீண்ட தூரம் சென்று, ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு முருகனை அனுப்பி வைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் தேவிகாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (35), தனியார் நிறுவன ஊழியர், இவர், தனது குழந்தைகளுக்கு காதணி விழாவிற்கு, ஆரணி டவுன் விகே நகர் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பதையை கொடுப்பதற்காக தனது மாமியார் தேவிகா(56), என்பவருடன் சென்று பத்திரிகை கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு தேவிகாபுரம் சென்றபோது, அதேஇடத்தில் மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அப்போது, சுதாரித்துக் கொண்டு அவர்களும் பைக்கில் வேகமாக சென்று, மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.