கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலையோர பள்ளத்தில், டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சென்னையில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(34) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். பெட்ரோல் லோடை இறக்கி விட்டு, நேற்று மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.
இந்த லாரி காலை 9 மணியளவில், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பாலமுருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக லாரியில் பெட்ரோல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.