தஞ்சாவூர், நவ.15: தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துணைமுதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரண்மனை வளாகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: துணை முதலமைச்சர் காரைக்குடியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணடை மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026 நேற்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அரண்மனை வளாகத்தில் அரண்மனை மகளிர் மேல்நிலைப் பள்ளி, கல்யாணசுந்தரம் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி தூய அந்தோணியார் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளி மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி பீட்டர் அரசு உதவிப்பெறும் பள்ளி, உமா மகேஸ்வரர் அரசு உதவிப்பெறும் பள்ளி, அரசர் அரசு உதவிப்பெறும் பள்ளி அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிளேக் அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் மேம்பாலம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த 1,681 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் நேற்று வழங்கப்பட்டது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,466 மாணவர்களுக்கு ரூ.4.14 கோடி மற்றும் 10,756 மாணவிகளுக்கு ரூ.5.11 கோடி என மொத்தம் 19,222 மாணவிகளுக்கு ரூ.9.26 கோடி மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்பட்டது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் ( இடைநிலை) மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) தலைமையாசிரியர் விஜயலட்சுமி, கவிஞர் சினேகன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
