Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படும்

தஞ்சாவூர், நவ.15: மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படுவதுடன் காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்வதற்காக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு தடை விதிக்காமல், இது சம்மந்தமாக தமிழ்நாடு அரசு தங்களுடைய நிலைப்பாட்டை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் முறையிட்டு தீர்வு கண்டிட வலியுறுத்தியுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வை உருவாக்குவதற்காக தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்த நடுவர் மன்றம் முதலில் இடைக்காலத் தீர்ப்பையும், பிறகு இறுதித் தீர்ப்பையும் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 2017ல் உச்சநீதிமன்றமும் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புகளில் காவிரி நதியின் நீரை பயன்படுத்தக்கூடிய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல், எந்த ஒரு மாநிலமும் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகளையோ, புதிய நீர் தேக்கங்களையோ கட்டக்கூடாது என்று தெளிவாக இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கர்நாடக அரசு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்திட தொடர்ச்சியாக பலமுறை காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்றுக் குழுவில் அனுமதி பெற முயற்சித்த போதெல்லாம் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவிடாமல் தடுத்து வந்தது. இந்நிலையில் தான் கர்நாடக அரசு இந்த திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் கோரியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் தமிழக அரசு கோரிய தடையை வழங்கவில்லை. இது கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்கு வலு சேர்த்துவிடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மேகதாட்டில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்.எனவே, தமிழக அரசு உரிய முறையில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.