தஞ்சாவூர், டிச.12: தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற் களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். மேலும் தஞ்சையில் கரும்பு, வாழை, தென்னை, எள், சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படும். இருப்பினும் அதிகபட்சமாக நெல் சாகுபடி தான் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் தற்போது வரை சுமார் 3.27 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்று உள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 4000 வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயிர் உரம் நுண்ணூட்ட உரங்கள் மற்றும் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் வயல்களை தயார் செய்வது, நாற்று தயாரிப்பது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட நாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மிஞ்சிய பரப்பளவில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் திருவையாறு பாபநாசம், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி அதிராம்பட்டினம், செங்கிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது சம்பா மற்றும் தாளடிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி மேற்கொண்ட இடங்களில் அதிகளவில் களைகள் மண்டி உள்ளது. காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூரை அடுத்த வரவு கோட்டை பகுதியில் வயல்களில் மண்டி உள்ள களைகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


