தஞ்சாவூர், டிச.11: தஞ்சாவூரை அடுத்த சாலியமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை சாலையில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.இதனால் மக்காச்சோள சாகுபடியில் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக மானாவரி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. இதற்காக விற்பனையும் உடனே முடிந்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தஞ்சையின் முக்கிய பயிராக நெல் இருந்து வருகிறது. நெல்லுக்கு அடுத்தப்படியாக சோளம், எள், வெற்றிலை, வாழை, கரும்பு, கீரை, பயிர், தேங்காய் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம், நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இந்தப் பயிருக்கு அதிக அளவில் தண்ணீர் தேவை இல்லாததால், மேற்கண்ட கிராமங்களில் சாகுபடி அதிக அளவு நடைபெற்றது.
சோளம் பயிர் நன்கு வளர்ந்து பூ பூத்து சோளத்தையும் வெளியில் பெரிய அளவில் கொடுத்து இருந்தது. இந்த சோளம் முதிர்வடைந்த பின் தற்போது விவசாயிகள் தொடர்ந்து அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்காச்சோளம் 4 மாத கால சாகுபடி பயிர் ஆகும். தற்போது அறுவடை மேற்கண்ட கிராமங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 25 குவிண்டால் வரை கூடுதல் மகசூல் கிடைத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகரித்து குவிண்டால் ரூ.2,500-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உடனே பணமும் கைக்கு வந்து விடுகிறது. மகசூலும் அதிகரித்து விலையும் கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


