தஞ்சாவூர், நவ 11: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராசாமடம் கிராமத்தில் மகாராஜா சமுத்திரம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மிக அருகிலேயே உள்ள மருதங்காவயல் பகுதியில் மணல் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியதை தடுக்க கோரி தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் நேற்று அண்ணியாறு மகாராஜா சமுத்திரம் ஆறு தடுப்பணை பயனாளிகள் சார்பில் மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் ராசாமடம், கொள்ளுகாடு, தொக்காளிகாடு, சின்ன ஆவுடையார் கோயில், மகிழங்கோட்டை, ஏரிப்புறக்கரை போன்ற கிராமங்கள் கடற்கரை ஒட்டிய பகுதியில் உள்ளன. இந்த தடுப்பணைக்கும் கடலுக்கும் இடைவெளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தான். இப்பகுதி விவசாயத்தை பிரதானமாக வாழ்வாதாரமாக கொண்டது. ஆற்றுப்பாசனம் அரிதாகி வந்த சூழ்நிலையில் மகாராஜா சமுத்திரம், அக்னி ஆற்றின் குறுக்கே 2021ம் ஆண்டில் சுமார் ரூ.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையின் பயனாக நிலத்தடி நீர் உயர்ந்தன் காரணமாக முப்பற்ற குடிநீரையும் விவசாயத்திற்கான நீரையும் ஆழ்குழாய் கிணறு வாயிலாக இப்பகுதி மக்கள் தற்போது வரை தடையின்றி பெற்று வருகின்றனர்.
அணையின் பாதுகாப்பிற்கு இரு மருங்கும் உள்ள நிலப்பரப்பு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடாக இருந்தாலும் என்பது மிகவும் அவசியமானது. ஆனால் தற்போது அணையை ஒட்டி மேற்புறத்தில் தனியார் நிலத்திலிருந்து மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். இப்படி அணையின் அருகிலேயே மண் தோண்டப்பட்டால் ஆற்றில் வெள்ளம் வரும்போது கரைகள் உடைந்து அணை பயனற்றதாகிவிடும்.இந்த தடுப்பணை மூலம் சுமார் 500 ஏக்கர் கொள்ளுக்காடு, மருதங்காவயல், புதுப்பட்டினம் கிராமத்தில் நீரற்று இயந்திரம் மூலம் சாகுபடி செய்கின்றனர். இந்த தடுப்பணை பாதிக்கப்பட்டால் இந்த சாகுபடி நிலங்கள் பாதிக்கப்படும். இந்த தடுப்பணை அருகில் உள்ள நிலங்கள் அரசுக்கு சொந்தமானதாகும். அதையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.இந்த இடத்தில்தான் மணல் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மணல் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
