வேடசந்தூர், ஜூலை 10: அய்யலூர் அருகே வண்டி கருப்பணசுவாமி கோயிலில் காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரித்தல், வாகனங்கள் பாதுகாப்பு கட்டண வசூல் உள்ளிட்டவை இசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டிற்கான ஏலம் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று நடந்தது. உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர்.
ஏலத்தில் பங்கேற்க பலரும் வங்கிகளில் டெபாசிட் தொகைக்கான டிடிக்களுடன் வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவால் எறிகாசு சேகரிப்பதற்கான ஏலம் மட்டும் நீக்கப்பட்டது. இதனால் ஏலதாரர்கள் மற்ற இருவகை ஏலத்தையும் புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் விரைவில் ஏலத்தை நடத்துமாறு செயல் அலுவலரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.