காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதல்வர், இந்தாண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன்படி, ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 155 முகாம்களும் என மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.இதில், முதற்கட்டமாக ஜூலை 15.7.2025 முதல் ஆகஸ்ட் 14.8.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 53 முகாம்களும் என மொத்தம் 78 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த, முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்கள்.மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று, விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரசு திட்டங்கள் மக்களின் இல்லத்திற்கே சென்று சேரும் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 15.7.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.