சிவகங்கை, நவ.6: சிவகங்கை அருகே கிராம உதவியாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே காடனேரி குரூப் விஏஓவாக பிரியதர்ஷினி, இதே குரூப்பில் கிராம உதவியாளராக கவிதா பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இருவரும் காடனேரி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக டேனியல்ராஜ் என்பவருக்கு நோட்டீஸ் வழங்க சென்றனர். இவரது வீட்டின் சுவற்றில் ஒட்டிய நோட்டீசை கிழித்த டேனியல்ராஜ், கிராம உதவியாளர் கவிதாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கவிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மதகுபட்டி போலீசார், டேனியல் ராஜை கைது செய்தனர்.
+
Advertisement
