சிவகங்கை, ஜூலை 24: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம் ஆகும். பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.17000 வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.