Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்: உடனே சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்

மானாமதுரை, நவ.26: மானாமதுரையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு பார்வோ வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக கால்நடை மருத்துவமனைக்கு வந்த ஏராளமான நாய்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை போல விலங்குகளும் நோய் பாதிப்புக்குள்ளாகின்றன. அந்த வகையில் மானாமதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது.

இதுபோன்று நோய் பாதிப்புடன் வரும் நாய்களை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஏராளமான நாய்களுக்கு ‘பார்வோ’ எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் நாய்களுக்கு வேகமாக பரவி வருவதும் தெரியவந்துள்ளது. மானாமதுரை கால்நடை மருத்துவ மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ‘பார்வோ’ வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சில நாய்கள் வைரஸ் பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்துள்ளன.

இது குறித்து கால்நடை டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘நாய்களுக்கு ‘பார்வோ’ வைரஸ் பாதிப்பு சமீப காலமாக அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இது நாய்களிடம் இருந்து பிற நாய்களுக்கும் பரவும். வாந்தி எடுத்தல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, உணவு உண்ணாமை போன்றவை இந்த பாதிப்புக்கான அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒரு வயதுக்கு உட்பட்ட நாய்களுக்கு தான் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது. இதற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளித்தால் குணமாக்கிவிடலாம். சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்கள் உயிரிழக்கும். நாய்களிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாது’’ என்று தெரிவித்தனர்.