இடைப்பாடி, செப்.23: சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகும் சரபங்கா நதி டேனிஸ்பேட்டை, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இடைப்பாடி வழியாக மௌலானி தடுப்பணை, செட்டிபட்டி, தேவூர் வழியாக அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சரபங்கா நதி கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இடைப்பாடி, குஞ்சாம்பாளையம், பழக்காரன்காடு, செட்டிபட்டி வழியாக சரபங்கா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தேவூர் அடுத்த மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை, கனமழைக்கு நீர் நிரம்பி நுங்கும், நுரையுமாக வழிந்தோடுகிறது. இதனால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் உள்ள பெரமாச்சிபாளையம், வெள்ளக்கல் தோட்டம், பாங்கிகாடு, சென்றாயனூர், ஒடசக்கரை, பனங்காடு, கோணக் கழுத்தானூர், மயிலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சரபங்கா நதி நீரை பயன்படுத்தி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, எள், சோளம், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
+
Advertisement