ஆட்டையாம்பட்டி, ஆக.23: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி என பலவிதமான மலர்கள் மற்றும் பல வகையான கனிகளை கொண்டு கோயில் வளாகம் முழுவதுமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு முத்தங்கி கவசம் அணிவிக்கப்பட்டு, பலவித வண்ண மலர்களை கொண்டு மாலைகளால் அலங்கரித்தனர். வள்ளி, தெய்வானை மயிலிரகு தொகையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வள்ளி -தெய்வானையுடன் முருகன் முத்து பல்லாக்கில் திருவீதி உலா வந்தார். கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
+
Advertisement