சிவகங்கை, ஆக. 15: பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவைகளை பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் பெரிய வகை உணவகங்களுக்கு (வருடாந்திர விற்பனை கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு) தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. விருப்பம் உள்ள உணவு வணிகர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 5.9.2025ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
+
Advertisement