Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

ராமநாதபுரம்,நவ.28: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக இடைவிடாமல் சிறு தூரல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. அது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் மாவட்டமான ராமநாதபுரத்தில் பரவலான பகுதிகளில் நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று இரவு வரை தொடர்ந்து சிறு மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 542.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் சிறுமழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், கடைவீதிகள் போன்ற பொது இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர்,மாரியூர், நரிப்பையூர், ரோச்மாநகர் கடல் பகுதிகள் எப்போதும் பேரலை இருப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அலைகள் இன்றி அமைதியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோல் சிவகங்கை மாவட்டத்தில் புயலால் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் முழுவதும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. கன மழை இல்லாமல் விடாமல் பெய்யும் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலையிலேயே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அஷாஅஜித் உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 22.6மி.மீ, காரைக்குடியில் 21மி.மீ, தேவகோட்டையில் 19.6மி.மீ, திருப்புவனத்தில் 18.4மி.மீ, சிங்கம்புணரியில் 15.2மி.மீ, திருப்பத்தூரில் 14மி.மீ, சிவகங்கையில் 13.6 மி.மீ, இளையான்குடியில் 13மி.மீ, மானாமதுரையில் 12மி.மீ மழை பதிவானது.

பொதுமக்கள் கூறியதாவது: ‘‘கன மழை இல்லாமல் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற பணிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்றனர்.