Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் பனிபொழிவுடன் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம்/ மண்டபம், நவ.27: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பகல் முழுதும் இடைவிடாமல் சிறு தூரல் மழை பெய்தது. பனிபொழிவும் இருந்ததால் குளிரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதக் கடைசி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த 20 மற்றும் 21ம் தேதி மாவட்டம் முழுதும் கனமழை பெய்தது. இந்நிலையில் வானிலை அறிக்கை தகவலின்படி தமிழ்நாடு கடலோர மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்னார் வளைகுடா கடல் மாவட்டமான ராமநாதபுரத்தில் பரவலான பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து சிறு சாரல் மழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சிறு மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் பனிபொழிவும் இருந்தது. இதனுடன் மேகமூட்டத்துடன் சிறுமழை பெய்ததால் குளிர்காற்று வீசியது. இதனால் குழந்தைகள்,முதியோர் அவதிப்பட்டனர். சாயல்குடி,ராமநாதபுரம், பரமக்குடி,ராமநாதபுரம், தொண்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பிரதான முக்கிய சாலைகளில் வாகனங்களை கவனமாக ஓட்டுனர்கள் இயக்கினர். சிறுமழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே பெய்த மழை வீடுகளை சூழ்ந்து தண்ணீர் கிடந்த பகுதிகளில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். மேலும் பள்ளிகளுக்கு மழையின் தன்மைக்கு ஏற்ப, சில பகுதிகளில் அந்தந்த தலைமையாசிரியர்கள், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு விடுமுறை விட்டனர்.

மண்டபம் உச்சிப்புளி, புதுமடம் உள்பட மண்டபம் ஒன்றிய பகுதிகளில் நேற்று காலை 8 மணியில் இருந்து தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இந்த சாரல் மழையாக மாறியதால், சாலைகளிலும் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. அதுபோல மண்டபம் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் வீசி வருகிறது. இந்நிலையில் காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் கட்டிட வேலை மற்றும் உள்பட கூலி வேலைக்கு செல்ல முடியாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட கூலி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். அதுபோல பொதுமக்கள் மளிகை கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் நேற்று பாதிக்கப்பட்டது.