கீழக்கரை, டிச.11: கீழக்கரையில் வாகனத்தில் கடத்திச் சென்ற 33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் கடற்காவல் நிலையங்கள் தோறும் சிறப்புப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், நுண்ணறிவு பிரிவு காவலர் மதியழகன் உள்ளிட்ட போலீசார் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த போது அதிலிருந்த 2 பேர் தப்பினர். வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 33 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் தப்பியோடியது கொட்டகை புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் பாலசுப்ரமணியம், ராமர் மகன் மாரிநாதன் என தெரிய வந்தது. கைப்பற்றிய 33 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ அரிசி ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.


