திருமயம்.அக்.31: திருமயம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தவருக்கு வெகுவாக பாராட்டினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாட்டரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன், மகாதேவன் ஆகியோர் திருமயம் அருகே பைக்கில் வந்த போது லாரி மோதி படுகாயம் அடைந்தனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மகாதேவன் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் காயம் அடைந்த மகாதேவனையும், உயிரிழந்த கணேசனையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விபத்தில் சிக்கியவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியர் மீட்டனர், பின்னர் திருமயம் அண்ணா அரசு தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மூலம் திருமயம் போலீஸிடம் மீட்கப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து பெரிய அளவிலான தொகையை உறவினர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, ஆம்புலன்ஸ் பைலட் ராஜா, கருப்பையா, செவிலியர்கள் வசந்தி, ரேவதி ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 
  
  
  
   
