புதுக்கோட்டை, நவ.18: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,கடந்த 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது புதுக்கோட்டை மாவட்டம்மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு திருச்சி(மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது புதுக்கோட்டை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது புதுக்கோட்டை,அண்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, டவுன் நகரளவு எண்:233/1, பிளாட் எண்.1, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், உதவி இயக்குநர் என்ற முகவரியிலோ அல்லது 04322-266994 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


