பாடாலூர், அக்.30: ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சுகாதாரத்துறை அமைச்சருடன் ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் என்.கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் ஒன்றிய குழு தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இந்தநிலையில் நேற்று சென்னை சென்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் 2 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்ததை நினைவுப்படுத்தினார். அதை தொடர்ந்து அந்த நிலத்தில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தியிடம் உறுதி அளித்தார்.
