பெரம்பலூர்,நவ.6: சிறுவாச்சூர் கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 106 கிலோ குட்காபொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று (5ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில், ராம்நகரில் வசிக்கும் தர்மலிங்கம் மகன் வெங்கடேஷ் (25) என்பவர் தனது வீட்டை குடோன்போல வைத்துக்கொண்டு, அதில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை, சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப் படையினர் வெங்கடேசைக் கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் (64.500 - கிலோ), கூல்லீப் (5.947 - கிலோ), விமல் பாக்கு (16.275 - கிலோ), V1-பான் மசாலா (7.500 - கி) மற்றும் தம்பா மசாலா (12.600 - கி) என மொத்தம் 106.822 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வெங்கடேசை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத் திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
