பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக நியமிக்க சவுதி அரேபியா அனுப்ப, நிகர் நிலை மூலம் (Online) விண்ணப்பங்களை வரவேற்கிறது . தற்காலிக பணிக்காலம் வருகிற 2026 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 2026 ஜூலை 05ஆம்தேதி வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.
முஸ்லிம் மதத்தினைச் சேர்ந்த மத்திய /மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். www.hajcommittee.gov.in என்ற மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 03ஆம்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே, இந்த வாய்ப்பை தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
