பெரம்பலூர், ஆக.1: பெரம்பலூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் தட்சிணாமூர்த்திக்கு, நேற்று (31ம் தேதி) ஆடி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, காலை 10.30 மணி முதல் 11.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதன்படி தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜா, ராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர். பூஜைகளை கவுரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.